சிரியாவிற்கான பஹ்ரைன் தூதர் 10 ஆண்டுகளுக்கு பின்னர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சிரியாவில் பசீர் அல் ஆசாத் தலைமையிலான அரசு ஆட்சியில் இருந்து வருகிறது. இந்த அரசிற்கு எதிராக அமெரிக்க அரசின் பின்புலத்தோடு ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பினர் போர் தொடுத்தனர். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்த இப்போரில் சிரியா அரசு பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளது. பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டிற்குள் இருந்த பகுதிகள் அனைத்தும் சிரியா அரசின் ராணுவம் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து விட்டது. இருப்பினும், ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பினர் அவ்வப்போது பொதுமக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, சிரியா நாட்டில் நிலவி வந்த போர் பதற்ற சூழல் காரணமாக பல நாடுகள் தங்களது தூதரக உறவுகளை முறித்துக் கொண்டது. குறிப்பாக, சவூதி அரேபியா தலைமையிலான பாரசீக வளைகுடாவைச் சேர்ந்த அரபு நாடுகள் சிரியாவுடனான தங்களது தூதரக உறவுகளை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு முறித்துக் கொண்டதோடு, அந்நாட்டு அரசிற்கு எதிராக போர் தொடுத்து வந்த பயங்கரவாத அமைப்புகளுக்கும் தங்களது ஆதரவை தெரிவித்து வந்தன.
இந்த சூழலில் தற்போது சிரியா நாட்டில் போர் பதற்றம் குறைந்து இயல்பு நிலை திரும்பி வருகிறது. இதனால் அந்நாட்டு மக்கள் சகஜ நிலைக்கு திரும்பியுள்ளனர். இதனால் கடந்த பல ஆண்டுகளாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த சிரியா மீண்டெழத் துவங்கியுள்ளது. இதைத்தொடர்ந்து சர்வதேச நாடுகள் பலவும் சிரியாவிற்கு உதவிக்கரம் நீட்ட துவங்கியுள்ளன.
இந்நிலையில், சிரியாவுடன் கடும் பகமை பாராட்டி வந்த அரபு நாடுகளில் ஒன்றான பஹ்ரைன் தற்போது அந்நாட்டுடன் நேசக்கரம் நீட்டத் துவங்கியுள்ளது. இதன் முதல்கட்டமாக சிரியாவில் தனது தூதரகத்தை அண்மையில் திறந்தது. இதன் தொடர்ச்சியாக சிரியா நாட்டிற்கான தனது தூதராக வஹீத் முபாரக் செய்யர் என்பவரை நியமித்துள்ளதாக பஹ்ரைன் அரசு அறிவித்துள்ளது.
முன்னதாக, கடந்த 2012 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15 ஆம் தேதியன்று சிரியாவுடனான தனது தூதரக உறவுகளை பஹ்ரைன் முறித்துக் கொண்டது. இந்த பின்னணியில் தற்போது சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தனது தூதரக உறவுகளை புதுப்பித்து கொண்டுள்ளது. இது சிரியா மற்றும் அரபு நாடுகளுக்கிடையேயான புதிய அத்தியாயமாக கருதப்படுகிறது. பஹ்ரைனை தொடர்ந்து மற்ற அரபு தேசங்களும் சிரியாவுடன் தனது நேசக் கரங்களை நீட்டத் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.